முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே தேடுவேன்? - பணம்

     

"எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை                                 
எங்கே தேடுவேன்?
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்? "
        - இது 1952 ல் 'பணம்'  என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது. 

இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.

பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று. 

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி"
  - இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில்

"பிணத்தை
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே" 
என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவனின் நகைச்சுவை கலந்த அவலக் குரலாக (Black Humour) இது ஒலிக்கும். நடிகர்திலகத்தின் நடிப்பும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்..
 (ஒரு முறை யூ டியுபில் இந்த பாடலை கண்டு ரசியுங்கள்.காலத்துக்கும் மறக்க மாட்டீர்கள்)
 பாடல்கள் கீழே. 

சரி, பணத்தை எங்கே தேடுவது? ' பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று சொல்வார்கள். கொஞ்சம் சிந்தித்தால், 'பணம் யாராவது நமக்கு கொடுத்தால்தான் கிடைக்கும்' என்ற விடை கிடைக்கும். நாம் கொடுக்கும் பொருளுக்கோ, அல்லது சேவைக்கோதான் பணம் கிடைக்கும். அதுவல்லாமல் கிடைக்கும் பணம் தவறான வழியில் வந்ததாக கருதப்படுகிறது. 

கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால், அவரது சேவைக்கு அந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது. உடல் உழைப்பாகவோ, மூளை உபயோகித்தோ அவர் அந்த சேவையை வழங்குகிறார். 
அடுத்தவர் வணிகம் செய்கிறார். அவர் கொடுக்கும் பொருளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட சேவை (service) செய்தோ, ஆலோசனையாகவோ( consultant) பணம் பெறலாம்.
இவையல்லாது கிடைக்கும் பணம் எல்லாமே சட்டத்துக்கு புறம்பானது. திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், ஊழல் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

சரி, யாரிடம் பணம் நிறைய சேரும்? எந்ததுறையாக இருந்தாலும் நன்றாக படித்து, அல்லது நன்றாக தொழில் கற்று (Skills Learning) நிறுவனத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வருபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. பணிபுரிவோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டேஇருக்க வேண்டியது அவசியமாகிறது. சுந்தர்பிச்சை - கூகிள், சத்ய நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இவர்களைச் சொல்லலாம். சத்ய நாதெள்ளா B.E , M.S , MBA முடித்து சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனியில் சேர்கிறார். பின்னும் 25 ஆன்லைன் கோர்ஸ்களில் இணைந்து கற்றாராம். என்ன உழைப்பு! (அதான் தலையில் முடி இல்லை ☺☺)

அரசு அதிகாரிகள் இதில் சேராது. அரசுப்பணி என்ற உலகம் தனி.

அடுத்து வணிகம். புதுப்புது உத்திகளோ, தொழில்நுட்பமோ வழங்கினால்தான் அதிக பணம் கிடைக்கிறது. எலான் மஸ்க் நல்ல உதாரணம். இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எப்படி எட்டினார்? புதுப்புது தொழில்நுட்பங்கள். ஜெப் பெசோஸ் அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனையைதான் தொடங்கினார். அவரது ஆரம்ப கால அலுவலகம் ஒரே ஒரு கணினியோடு துவங்கப்பட்டது. இன்று? அமேசான் உலகின் முன்னணி நிறுவனம். காரணம், வியாபார உத்திகள். 

சரி, எல்லோருமே சுந்தர் பிச்சையாகவோ, எலான் மஸ்க் ஆகவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. இவ்வுலகில் யாரும் யாராகவும், யார் மாதிரியும் ஆக முடியாது. மேலும் அவர்களும் பணத்தை நோக்கி ஓடியவர்களல்ல. (எலானின் மந்திரமே பணத்தை எண்ணி தொழில் செய்யாதே. புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடி என்பதுதான்) திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் பணம் அவர்களை நோக்கி வந்தது. நம் முழு கவனமும் (Focus) புதுமைகளில் மட்டுமே இருந்து, குடும்ப சூழலும், புற சூழலும் அமைந்தால் நாமும் பணக்காரர்கள்தான். கலைத்துறையாக இருந்தாலும் அதுதான். 
முடியவில்லையா? பெரு மூச்சு விடுவதை நிறுத்துங்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகுங்கள். 

சரி அடுத்து, அரசியல்வாதிகள் எல்லோரும் பணக்காரர்களாக உள்ளனரே, நாமும் அரசியல்வாதியாகிவிடலாமா? ஹலோ, அரசியல் என்பது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக மக்கள் தேர்வு செய்வது. பணம் சம்பாதிக்க அல்ல. அது சட்டப்படி குற்றம். என்றைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். 

'காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கைமாறும் பணமே, உன்னைக் கைப்பற்ற துடிக்குது மனமே'

நிறைய பணம் சம்பாதித்தால் வாழ்க்கை சந்தோஷம் தானே? 

அது வேற டாபிக், பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜோதிடம் உண்மையா, பொய்யா? நம்பலாமா. கூடாதா?

 ஜோதிடம் - ஒரு அலசல் ஒவ்வொரு மனிதனுக்குமே நாளை என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தீராத ஆர்வம். அதுவும் வாழ்க்கையில் மோசமான கட்டத்தில் இருந்தால் சொல்லவே வேண்டாம். ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவர் 'நாளை நன்றாக இருக்கும்; எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று சொன்னால் போதும்'. ஒரு மன நிம்மதி; உண்மையா என்றெல்லாம் தேவையில்லை. இன்றைக்கு ஒரு ஆறுதல்.. உண்மையிலேயே ஜோதிடம் சரியா? இல்லை ஏமாற்றுவேலையா? பார்ப்போம்.. முதலில் ஒரு கதை ( இல்லை, சரித்திரம்). ஐந்தாம் நூற்றாண்டில், மகதப் பேரரசில் விக்ரமாதித்ய மகாராஜாவின் அமைச்சரவையில் ஒருவர் ' மிகிரர்' . சிறந்த கணிதமேதை, வானியல் நிபுணர், ஜோதிட வல்லுநர். அவர் அரசரின் புதல்வரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 18 வயது வரைதான் வாழ்வார். அதோடு ஆயுள் முடிந்தது' என்கிறார். அதே போல நடக்கிறது. (இதைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. பன்றியால் சாவார் என்றார். கடும் பாதுகாப்பிலும் பன்றி கொடி கம்பால் இறந்தார் என்பது போல). மிகிரரின் திறமையைப் பாராட்டி அரசர் 'வராஹ' என்ற பட்டத்தைக் கொடுக்க ' வராஹமிகிரர்...

பந்தயம் - ஆன்டன் செகோவ் (சிறுகதை)

 பிரபல உலகச் சிறுகதைகள் சிறுகதைகளின் முன்னோடி என்று கூறப்படுபவர் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,  அவருக்கு பிடித்த உலகச் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதை இது. அவரது வலைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம்: பாஸ்கரன். நான் ரசித்த இந்தக் கதையை நீங்களும் படித்து ரசியுங்கள்!    பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் (The Bet - 1889) இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி (வட்டிக்கடை) செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிகமானது என்றும், கிருஸ்...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...