முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே தேடுவேன்? - பணம்

     

"எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை                                 
எங்கே தேடுவேன்?
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்? "
        - இது 1952 ல் 'பணம்'  என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது. 

இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.

பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று. 

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி"
  - இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில்

"பிணத்தை
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே" 
என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவனின் நகைச்சுவை கலந்த அவலக் குரலாக (Black Humour) இது ஒலிக்கும். நடிகர்திலகத்தின் நடிப்பும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்..
 (ஒரு முறை யூ டியுபில் இந்த பாடலை கண்டு ரசியுங்கள்.காலத்துக்கும் மறக்க மாட்டீர்கள்)
 பாடல்கள் கீழே. 

சரி, பணத்தை எங்கே தேடுவது? ' பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று சொல்வார்கள். கொஞ்சம் சிந்தித்தால், 'பணம் யாராவது நமக்கு கொடுத்தால்தான் கிடைக்கும்' என்ற விடை கிடைக்கும். நாம் கொடுக்கும் பொருளுக்கோ, அல்லது சேவைக்கோதான் பணம் கிடைக்கும். அதுவல்லாமல் கிடைக்கும் பணம் தவறான வழியில் வந்ததாக கருதப்படுகிறது. 

கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால், அவரது சேவைக்கு அந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது. உடல் உழைப்பாகவோ, மூளை உபயோகித்தோ அவர் அந்த சேவையை வழங்குகிறார். 
அடுத்தவர் வணிகம் செய்கிறார். அவர் கொடுக்கும் பொருளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட சேவை (service) செய்தோ, ஆலோசனையாகவோ( consultant) பணம் பெறலாம்.
இவையல்லாது கிடைக்கும் பணம் எல்லாமே சட்டத்துக்கு புறம்பானது. திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், ஊழல் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

சரி, யாரிடம் பணம் நிறைய சேரும்? எந்ததுறையாக இருந்தாலும் நன்றாக படித்து, அல்லது நன்றாக தொழில் கற்று (Skills Learning) நிறுவனத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வருபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. பணிபுரிவோர் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டேஇருக்க வேண்டியது அவசியமாகிறது. சுந்தர்பிச்சை - கூகிள், சத்ய நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இவர்களைச் சொல்லலாம். சத்ய நாதெள்ளா B.E , M.S , MBA முடித்து சன் மைக்ரோசிஸ்டம் கம்பெனியில் சேர்கிறார். பின்னும் 25 ஆன்லைன் கோர்ஸ்களில் இணைந்து கற்றாராம். என்ன உழைப்பு! (அதான் தலையில் முடி இல்லை ☺☺)

அரசு அதிகாரிகள் இதில் சேராது. அரசுப்பணி என்ற உலகம் தனி.

அடுத்து வணிகம். புதுப்புது உத்திகளோ, தொழில்நுட்பமோ வழங்கினால்தான் அதிக பணம் கிடைக்கிறது. எலான் மஸ்க் நல்ல உதாரணம். இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எப்படி எட்டினார்? புதுப்புது தொழில்நுட்பங்கள். ஜெப் பெசோஸ் அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனையைதான் தொடங்கினார். அவரது ஆரம்ப கால அலுவலகம் ஒரே ஒரு கணினியோடு துவங்கப்பட்டது. இன்று? அமேசான் உலகின் முன்னணி நிறுவனம். காரணம், வியாபார உத்திகள். 

சரி, எல்லோருமே சுந்தர் பிச்சையாகவோ, எலான் மஸ்க் ஆகவோ முடியுமா? கண்டிப்பாக முடியாது. இவ்வுலகில் யாரும் யாராகவும், யார் மாதிரியும் ஆக முடியாது. மேலும் அவர்களும் பணத்தை நோக்கி ஓடியவர்களல்ல. (எலானின் மந்திரமே பணத்தை எண்ணி தொழில் செய்யாதே. புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடி என்பதுதான்) திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் பணம் அவர்களை நோக்கி வந்தது. நம் முழு கவனமும் (Focus) புதுமைகளில் மட்டுமே இருந்து, குடும்ப சூழலும், புற சூழலும் அமைந்தால் நாமும் பணக்காரர்கள்தான். கலைத்துறையாக இருந்தாலும் அதுதான். 
முடியவில்லையா? பெரு மூச்சு விடுவதை நிறுத்துங்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகுங்கள். 

சரி அடுத்து, அரசியல்வாதிகள் எல்லோரும் பணக்காரர்களாக உள்ளனரே, நாமும் அரசியல்வாதியாகிவிடலாமா? ஹலோ, அரசியல் என்பது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக மக்கள் தேர்வு செய்வது. பணம் சம்பாதிக்க அல்ல. அது சட்டப்படி குற்றம். என்றைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். 

'காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
கைக்கு கைமாறும் பணமே, உன்னைக் கைப்பற்ற துடிக்குது மனமே'

நிறைய பணம் சம்பாதித்தால் வாழ்க்கை சந்தோஷம் தானே? 

அது வேற டாபிக், பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... - சுஜாதா சிறுகதை (1965)

  மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுகதை         - சுஜாதா மோபியஸ் ஸ்ட்ரிப் (Mobius strip) என்று ஒரு சமாச்சாரம் உண்டு ஒரு காகித ரிப்பனில் எளிதாகச் செய்யலாம். நீண்ட ரிப்பனை ஒரு முறை திருகி ஒட்ட வைத்து விட்டால் டோப்பாலஜி (Topology) என்னும் கணித இயலின் படி இது ஒரு மிக சுவாரஸ்யமான பொருளாகிறது. இந்த வளையத்தைப் பற்றி நிறைய சமாச்சாரங்கள் எழுதியுள்ளனர். இந்த வளையத்தை நடுவில் குறுக்கே (முதுகில்) வெட்டிக் கொண்டே போனால், இரண்டாகவே ஆகாது. சட்டென்று ஒரு முழு வளையம் விடும். (விடும் போது பிளேடு உபயோகித்தால் ரத்தக் காயத்துக்கு நான் பொறுப்பல்ல). மோபியஸ் வளையத்தில் பல வித்தைகளைச் செய்துள்ளனர். முடிவில்லாத ஆனந்தம் என்று ஒரு மோபியஸ் வளையத்தில் எழுதி கிறிஸ்துமஸ் அட்டை செய்திருக்கிறார்கள். எஷர் (Maurits Cornelis Escher - alias M C Escher ) என்ற சித்திரக்காரர் மோபியஸ் வளையத்தை வைத்து வரைந்த சித்திரம் ஒன்று உண்டு. மோபியஸ் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு அடியேன் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் .  கதையின் பெயர்:  மன்னிக்கவும். இது கதையின் ஆரம்பமல்ல.... "டிட்டோ" என்றே...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....