முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதனால் என்ன? (So What?)

 அதனால் என்ன?

இந்த இரண்டு வார்த்தைகள் எனது வாழ்வில் மந்திரச் சொல். எப்பேர்ப்பட்ட மனநிலையிலும் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகள் அவை.

2012 ல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட அனுபவம். அதன் தலைவர் (Chairman) ஊழியர்களை சந்திக்கும்போது, அவர்கள் என்ன புகார் தெரிவித்தாலும், என்ன குறை கூறினாலும், 'So What? What are you doing?' என்று கடந்து விடுவார். 

அந்த நிறுவனத்தில் அலுவலக அரசியல் (Office Politics) மிக மிக அதிகம். யாருமே 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது. காரணம், ஒரு வேலையும் தெரியாதவர்கள், வேறு எங்குமே வேலைக்குப் போக முடியாதவர்களே மிகக் குறைந்த சம்பளத்தில் அதிக காலமாக பணியாற்றுவார்கள். எனவே அவர்கள் வேலையைவிட அரசியல் செய்வதுதான் அதிகம். இதை தலைவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் என்னிடம் சொல்வார்," நான் என்ன குப்பைத் தொட்டியா? இவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, எந்நேரமும் இவர்கள் குறைகளை என்மீது கொட்டுவதற்கு? இவர்களிடம் பேசினாலே நமது மூடையும் மனதையும் கெடுத்து விடுவார்கள்"

அந்த "So What?" எனது மனத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. என்ன பிரச்னைகள்,
கஷ்டங்கள் வந்தாலும், 'அதனால் என்ன?' என்பதுதான் எனது மனதில் தோன்றும் முதல் கேள்வியாக இருக்கும். அது நமது பிரச்னையை நேர்வழியில் சிந்திக்க தூண்டும். எதையும் எதிர்நோக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்.

கோபம் குறைக்கும் வழி
வாழ்க்கையில் கடினமான தருணங்கள், நமக்கு கோபம் வரும் நேரங்கள்தான். கோபத்தை வென்றாலே அமைதி கிடைக்கும்.   கடந்த 10 வருடங்களில் எனது கோபம் 90 சதவீதம் குறைந்துவிட்டது. மனது அமைதியாகி விட்டது இதற்கு இந்த வார்த்தைகள் ஒரு காரணம். (வயதும் ஒரு காரணம்).

" நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
   பகையும் உளவோ பிற "  - முக மலர்ச்சியும் அக மலர்ச்சியும் கொல்லுகிற
சினத்தைவிட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ? என்கிறார் திருவள்ளுவர். 
திருக்குறளில், வெகுளாமை (கோபம் கொள்ளாமை) என்ற அதிகாரம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க'', பலிக்கக் கூடிய இடத்தில் தடுப்பவனே கோபத்தை அடக்கியவனாகிறான். பலிிக்காத இடத்தில் அடக்கினால்  என்ன; அடக்காவிட்டால் என்ன? - இவை அந்த அதிகாரத்தின் முக்கிய கருத்துக்கள்.

கோபத்தை அடக்க பல வழிகள் சொல்வார்கள். கோபம் வந்தால் 1-10 வரை எண்ணிவிட்டு செயல்படு அல்லது பேசத் துவங்கு, கோபம் வரும்போது நம் வாயிலிருந்து வரும் வசவுகளை எழுதி வைத்து, பிறகு வாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு திருக்குறள் கதையில், கோபம் வரும்போது 10 அடி பின்னே நடந்து முன்னே வர வேண்டும் என்றெல்லாம் வரும்..
நான் செய்வது, ' அதனால் என்ன ' என்று நினைப்பது மட்டும்தான்!

மனச்சோர்வுக்கான மருந்து
கோபத்தைப் போல நம் மனதைச் சோர்வுறச் செய்பவை - கவலை, சோகம், விரக்தி, ஆத்திரம், வேதனை, வருத்தம், துன்பம் , துக்கம், துயரம் ஆகியவை. 
அனைத்தும் ஒன்றுதானே என்கிறீர்களா? இல்லை.
 
கவலை - எதிர்கால நிகழ்வின் மீதுள்ள கற்பனையால் வரும் அச்சம் போன்ற உணர்வு (உதாரணத்திற்கு - தேர்வில் தோற்றுவிடுவோமோ, வேலை கிடைக்காதோ - போல)

சோகம் - ஈடு செய்யக்கூடிய இழப்பினால் வருவது: சாதகமற்ற நிகழ்வினால் வருவது     (உதா - தேர்வு நேரத்தில் உடல் நலமின்றி தேர்வு எழுதமுடியாமல் போனால்?) நமக்கு பிடித்த நண்பர்களோ, உறவோ படும் துயரம் கண்டு ஏற்படுவதும் சோகம்தான்.

விரக்தி - தோல்வியால் நம்பிக்கை இழந்து, அடுத்து என்ன செய்வது; இலக்கு என்ன என்று தெரியாதிருக்கும் நிலை (பள்ளி, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வியுற்றால்; தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியானால்  வருவது)

ஆத்திரம் - அதீத கோபம் அல்லது பொறாமையோடு, பொறுமையின்மையும் சேர்ந்தால் ஏற்படுவது. வன்முறைகளுக்கு மூல காரணம் இதுதான். 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' அல்லவா?

வேதனை - வெளியில் நடந்த நிகழ்வோ அல்லது நினைவுகளோ தரும் மனவலி.(நண்பனோ காதலியோ விலகிவிட்டால்)

வருத்தம் - நம்முடன் பழகியவர் அல்லது புதியவர் இடையில் ஏற்படும் சங்கடம் அல்லது அவர் செய்யும் செயல் மீது நமக்கிருக்கும் கருத்து வேறுபாட்டால் ஏற்படும் வெறுப்பு

துன்பம் - பிறரால் ஏற்படுவது (வறுமையில் இருக்கும் ஒருவரிடம் கடன் கொடுத்தவர் கேட்டு அவமானப்படுத்தும்போது)

துக்கம் - அடக்க முடியாத மனவலி ; ஒன்றை இழ்ப்பதின் வலி (நெருங்கியவரின் மரணம்)

துயரம் - இல்லாமை அல்லது வறுமை; கிடைக்காமை அல்லது இயலாமையினால் ஏற்படுவது  (வெற்றி பெறாதவர்கள் அடைவது)

இவை அனைத்திலிருந்தும் மீள, " அதனால் என்ன" மனப்பான்மை அவசியம். அப்போதுதான் நாம் வாழ்க்கையில் முன்னோக்கி நகர முடியும்.

கவலை வேண்டாம்
'தி லயன் கிங்' (The Lion King) கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில், குட்டி சிங்கம் சிம்பா, ராஜாவான தந்தையை இழந்து, தனது நாட்டை விட்டு பாலைவனத்துக்கு
துரத்தப்படும். அங்கு பாலைவனச்சோலையில் இரு நண்பர்கள் (காட்டுப்பன்றி, கீரி) அறிமுகம் கிட்டும். அவை குட்டி சிங்கத்துக்கு ஆறுதல் கூறி சந்தோஷப்படுத்த "ஹகூனா மட்டாடா" என்ற பாடலைப் பாடும். மிக அருமையாக ஜாலியாக இருக்கும்.
பாடல் முடியும்போது குட்டி வளர்ந்து பெரிய சிங்கமாகிவிடும். அந்தப் படம் பார்த்து அந்த வார்த்தைகள் எனக்கு மறக்கவேயில்லை. "ஹகூனா மட்டாடா" (Hakuna Matata) என்றால் 'கவலை வேண்டாம்' (No worries) என்று அர்த்தமாம். ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி (Swahili) வார்த்தைகளாம் அது. (அந்தப் பாடலை கீழே இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள்)
அந்த இரண்டு வார்த்தைகள் பிரச்னைகளை முடித்து வைக்கும் என்று அந்த பாட்டில் வரும். அதே போல்தான் ' அதனால் என்ன?" வார்த்தைகளும். 

காதலன் படத்தில் பிரபுதேவா ஆடுவாரே "ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈசி ஊர்வசி;
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி" அதுதான் 'அதனால் என்ன?' மனப்பாங்கு.
அதே கவலை வேண்டாம் வார்த்தைகளை ரஜினிகாந்த் நடித்த ஒரு பாட்டில் ' இதுக்கு போய் அலட்டிக்கலாமா?' என்று எஸ்.பி.பி குழைந்து பாடியிருப்பார்.
"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா? என்று P.B.சீனிவாஸ் குரலில் ஒரு பாடல் உண்டு. கண்ணதாசனின் வைரங்களில் அதுவும் ஒன்று. இவற்றிற்கெல்லாம் எளிமையான வெர்ஷன்  'அதனால் என்ன?'.

குழப்பமான மனநிலையைத்தான் கவலை என்கிறோம். ஒரு பிரச்னைக்கு தீர்வு காணமுடியாக் குழப்பத்தில், கவலைப்பட ஆரம்பிக்கிறோம். தீர்வு நம் கையில் இருந்தால், உடனே முடிக்க முயற்சி செய்ய வேண்டியதுதானே! கவலைப்பட அவசியமில்லையே. தீர்வு நம் கையில் இல்லாவிட்டால் கவலைப்பட்டு என்ன பயன்? காலத்திடமோ, இறைவனிடமோ விட்டுவிட்டு 'அதனால் என்ன' என்று அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதான். அவ்வளவுதாங்க!

திருக்குறளில் 'ஊக்கமுடைமை' அதிகாரமும் சிறந்த தன்னம்பிக்கை மருந்து. படியுங்கள். ஊக்கமுடன் வாழ்வோம்!

 "ஹகூனா மட்டாடா"

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...