முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐங்குறு நூறு கூறுவதென்ன? (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 4 

ஐங்குறு நூறு - இலக்கியச் செறிவு

3 அடி முதல் 6 அடி வரை உள்ள 500 அகப்பாடல்கள் கொண்டது. ஐந்திணைகளுக்கும் 100 பாடல்கள் வீதம், ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர்.

  • மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
  • நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
  • குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
  • பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
  • முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்கள் பத்துப் பத்து பாடல்களாகப்
பிரிக்கப்பட்டுத் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவர் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.

கடவுள் வாழ்த்து
பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.
 இந்தப் பாடல் சிவனை வாழ்த்துகிறது.

"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே"

பொருள்
 நீலமேனியினளான, தூய அணிகள் பூண்ட தேவியைத் தன் பாகத்தில் வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பற்றவனின் இரு திருவடிகள் நிழலின் கீழாக, 'மேல், நடு, கீழ்' என்னும் மூவகை உலகங்களும் (தேவருலகம், மானிட உலகம், பாதாள உலகம் என்றும் கொள்ளலாம்) முறையே தோன்றின.

சில பாடல்கள்
மருதத்திணை (ஓரம்போகியார்)

வேட்கைப் பத்து
தோழி தலைவனிடம் சொன்னது

'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே'

பொருள்
வாழ்க ஆதன் (குடி மக்கள்) ! வாழ்க அவினி (மன்னன்) ! நெல் பலவாக விளைவதாக! செல்வம் கொழிக்கட்டும்! எனத் தாய் வேண்டினாள். மொட்டுக்களையுடைய காஞ்சி மரத்தையும், சினைகளையுடைய சிறு மீன்களை மிகுதியாகக் கொண்ட ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவன் ஏவலனாகிய பாணனும் வாழ்க! என்று நாங்கள் வேண்டினோம்.

கிழத்தி கூற்றுப்பத்து
பரத்தையரிடமிருந்து திரும்பிய கணவனிடம் மனைவி ஊடும் பாங்கினைக் காட்டும் பாடல்கள் இவை

"பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே"

பொருள்
பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய உன் மார்பினை அணைக்க மாட்டேன்.

நெய்தல் திணை (அம்மூவனார்)

தோழிக்குரைத்த பத்து
தலைவன் வரவுக்காக மனம் இரங்கி, தலைவி தோழியிடம் கூறும் செய்திகள் இதில் உள்ளன. அம்ம வாழி தோழி – என்று எல்லாப் பாடல்களும் தோழியை விளித்துக் கூறுகிறது.

"அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச்சேர்ப்பன்
தான் வரக் காண்குவம்நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே".

பொருள்
பசுமையான இலை கொண்ட செருந்தி மரமானது உப்பங்கழிப் பரப்பில் பூத்துக் கிடக்கும் சேர்மிக்க சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வருவதை முன்பெல்லாம் கண்டு இன்புற்ற நாம் இப்போது அவனை நெஞ்சம் மறக்கும் நிலை ஆயிற்றே. இதனை வெளியில் சொல்லவும் நெஞ்சம் நாணுகிறதே.

தொண்டிப் பத்து 
 இதிலுள்ள பாடல்கள் தொண்டி துறைமுகம் பற்றி பேசுகின்றன.

"இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே".  

பொருள்
பின்னிய கூந்தலில் தொண்டியில் பூத்த நெய்தல் மலரைச் சூடிக்கொண்டிருக்கும் அவள் அழகில் மயங்கி வருந்துபவர் இரவிலும் கூடப் பாம்பு பாய வருவது போல் தூங்காமல் இருப்பர்

குறிஞ்சி திணை (கபிலர்)

அம்ம வாழிப் பத்து
அம்ம வாழி தோழி என்று அழைத்துக் கூறும் பாடல்கள்

"அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?"

பொருள்
தலைமகள் தோழியிடம், அம்ம வாழி, தோழி! நம் ஊருக்கு வந்து செல்லும் மார்பன்; மணக்கும் மார்பன்; இதமாகத் தழுவும் மார்பன், இனி தம் ஊருக்கு வரமாட்டாரோ என்று என் நெற்றி பசக்கிறது போலும்.

பாலைத்திணை (ஓதலாந்தையார்)

தலைவி இரங்கு பத்து
தலைவி கலக்கத்துடன் தோழியிடம் சொல்கிறாள்

"அம்ம வாழி, தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே"

பொருள்
அம்ம தோழி! இதனைக் கேள்; பிரியாதவர் போல காட்டிக்கொண்டு என்னைப் புணர்ந்தார். பொருள் ஆசை அவரை விடவில்லை. பொருள் தேடிவரக் கோடை காலத்தில் பிரிந்து சென்றுவிட்டார்.

முல்லைத்திணை (பேயனார்)

பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
கார் காலம் வரும்போது திரும்பிவிடுவேன் – என்று கூறிச் சென்ற கணவன் வராமை கண்டு மனைவி கூறும் செய்தி இங்குக் கூறப்படுகிறது.

"அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!"

பொருள்
அரசனே, நீ உன் பகையைத் தணித்துக்கொள் – என்று முரசு முழக்கிச் சொல்வது போல கார்மேகம் இடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தோ! என் அகன்று விரிந்த மார்பகத்தோள் இரங்கத் தக்கது. ஒளி பசந்து, மின்னும் அணிகலன்கள் கழன்று, பழமையான நலமெல்லாம் இழந்து வாடுகிறது.


முழு நூலை உரையோடு படிக்க












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...