முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புறநானூறு - ஒரு சிறப்பு அறிமுகம் (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 7 

புறநானூறு

ஒரு சிறப்பு அறிமுகம் எனக் குறிப்பிட்டதின் காரணம்: நான் எழுதவில்லை. எனது

குருநாதர் சுஜாதா அவர்கள் எழுதியதை இங்கு கொடுத்துள்ளேன். அவர் எழுதிய 'புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்' வாங்கிப் பாடியுங்கள். அவ்வளவு எளிமையாக, சிறப்பாக விளக்கியிருக்கிறார். அதிலிருந்து சிறிய கட்டுரையாகவும் வெளிவந்தது. அதையே இங்கு வழங்குகிறேன்

இணைப்பில் உ.வே.சா மற்றும் புலியூர்க்கேசிகன் உரைகள் உள்ளன. அனைவரும் படித்து பயன் பெறவேண்டிய நூல்.

 புறநானூறின் சிறப்புகள் - சுஜாதா

புறநானூறு உள்ளிட்ட பல சங்கப்பாடல்களில் யவனர்களைப் பற்றியும் அவர்களுடன் வாணிகம் பற்றியும், முசிறி போன்ற துறைமுகங்கள் பற்றியும்

வரிகள் உள்ளன. பெரிப்ளூஸ், டாலமி, ப்ளினி போன்றவர்களின் பூகோள பிரயாண நூல்களில், தென்னிந்திய துறைமுகங்களில் - குறிப்பாக, மிளகு பண்டமாற்றம் செய்ததைப் பற்றியும் செய்திகள் உள்ளன. 'மான்சூன்' என்னும் பருவக்காற்றின் சாதகத்தை, 'ஹிப்பாலஸ்' என்னும் மாலுமி கண்டுபிடித்த கி.பி. 45க்குப் பின்தான் கிரேக்க- தென்னிந்திய வர்த்தகம் தழைத்தோங்கியது.

புறநானூறு 343 - முசிறி துறைமுகத்தில் வீடு தோறும் மிளகு குவித்து வைத்திருந்ததையும், பண்டமாற்றுத் தங்கத்தைக் கொண்டு வந்த சிறு படகுகளைப் பற்றியும் சொல்கிறது. சிலப்பதிகாரம் - சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டியதையும்  இலங்கை மன்னன் கயவாகு வந்து வழிபட்டதையும் சொல்கிறது. கயவாகு, கி.பி 171லிருந்து 192 வரை ஆண்டதைக் கெய்கர் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவனின் காலத்தை - பதிற்றுப் பத்திலிருந்து கி.பி 170லிருந்து 226 வரை என அறிய முடிகிறது. செங்குட்டுவன் உதியன் சேரலாதனின் பேரன். எனவே, பெருஞ்சோற்று உதியன் என்று கூறப்படும் சேர மன்னனின் காலம், கி.பி 130 ஆகிறது; மகாபாரதக் காலமில்லை. அல்லது, இவன் வெறும் சோற்று உதியன் என்று சொல்லித் தப்பிக்கலாம்.

எப்படியும் சங்க காலத்துப் புலவர்களை, இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டுத் திறமையுள்ள ஆராய்ச்சியாளர்கள் சொல்வதில்லை. தமிழ் மொழியின் 'நான்' 'யான்' போன்ற பிரயோகங்களையும் அதில் சேர, சோழ, பாண்டிய, குறு நில மன்னர்களின் பெயர்களையும் வைத்து ஆராயும் கட்டுரைகள் நம்புதற்குரியவை. 'மைம்மீன் ஆயினும் தூமம் தோன்றினும்' போன்ற வானவியல் குறிப்புகளும் பல உள்ளன. சனி பகவான் - ரிஷபம், சிம்மம், மீனம் போன்ற ராசிகளோடு மாறுபடுவதும், இவற்றுள் சனி சிம்ம ராசியில் புகுந்தால், உலகத்திற்குக் கேடும் விளையுமாம். தூமம் என்பது வால் நட்சத்திரம். இந்த விவரத்திலிருந்து தேதி, நேரம், நிமிஷம் போன்றவைகளைச் சோதிட வல்லவர்கள் கண்டுபிடிக்கமுடியும்.

எந்த நூற்றண்டாக இருந்தாலும், புறநானூறின் பாடல்கள் உலக இலக்கியத் தரத்திற்கு உயர்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. பல பாடல்கள், பரிசில் விரும்பும் புலவர்கள் புரவலர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுபவை. இருப்பினும் சில பாடல்கள் பிரமிப்போட்டும் கருத்துகள் கொண்டவை.

"உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்; 
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே!"

கல்வியின் முக்கியத்துவம் பற்றி எத்தனை யதார்த்தமான பாடல் பாருங்கள். இப்படித் தனிப்பாட்டு ஜொலிக்கும் சில பாடல்களைப் பார்க்கும் போது, இவைகளை யார் எந்த சந்தர்ப்பத்தில் அமைத்திருக்க முடியும் என்பதைப் பாடல்களின் அடிக்குறிப்புகளை ஒரு நிமிஷம் மறந்து விட்டுச் சிந்திக்கும்போது, சில மேல் நாட்டவர் போல் இவைகள் ஒரு நாடகத்தின் உரையாடல் பகுதிகளோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. (dramatic monologues)

இந்தப் பகுதியில் நான் முயன்றிருப்பது புறநானூற்றுப் பாடல்களில் உள்ள ஆதாரக் கருத்தை எளிய, இன்றைய தமிழில் லேசான புதுக்கவிதை போல் சொல்வதே! ஒவ்வொரு பதத்திற்கும் உரை கொடுத்து, பொழிப்புரை தந்து வாசகர்களைப் படுத்த விரும்பவில்லை. அப்படிச் செய்து - அதன் மையக்கருத்தை மழுப்பவோ சிலசமயம் கோட்டை விடவோ விரும்பவில்லை. புறநானூற்றுப் பாடல்களை நவீன வாசகன் விரும்பாததற்கு, என் கருத்தில் முக்கிய காரணம் அதன் கடுமையான தமிழ். அதில் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும் முன் அடுக்கப்பட்டிருக்கும் உரிச் சொறகளும் ஒட்ட வைத்திருக்கும் வர்ணணைத் தோரணங்களும் குவிக்கப்பட்ட படிமங்களும் உவமைகளும்தான்.

'தூணைப் பிடித்துக் கொண்டு என்ன கேட்கிறாய்' என்று நேரடியாகச் சொல்லாமல், 'என் சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு என்ன கேட்கிறாய்' என்று இழுத்தடிப்பார்கள். 'வேல்' என்று நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். 'பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்' என்பார்கள். அதாவது, பூமியில் நிறைந்த பாதுகாப்பும், புதிதான புலால் நாற்றமும் உடைய நீண்ட வேல். 'மனைவி' என்று நேரடியாக இருக்காது. 'நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியக் குறுமகள்' என்று அவள் போட்டிருக்கும் நகை, அவள் நெற்றி, கண் போன்றவைகளை ஆகுபெயர்களாகச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் வர்ணித்துவிட்டுதான் விஷயத்துக்கே வருவார்கள். இந்த நவீன யுகத்துக்கு அனாவசிய வர்ணனைகளை உதிர்த்துவிட்டுப் பார்க்கையில், பாடலில் ஒளிந்திருக்கும் ஆதாரக் கருத்து பலமுறை பிரமிப்பூட்டும். இதைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு மட்டும் எளிமைப்படுத்தியுள்ளேன்.

சில சமயம் மிக அழகான உவமைகள் வரும்போது அவைகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். உதாரணமாக, மேலே குறிப்பிட்டதில், பரிசு கேட்டு வந்த புலவருக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதை, 'நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நுதல்' நாணம் மட்டுமே நகையாக அணிந்த மனைவியை நோக்கித் திரும்புகிறேன் என்கிறார். அவளுடைய ஏழ்மையும், அழகும் ஏழ்மையும் அழகும் ஒரே சமயத்தில் வெளிப்படுகின்றன. இது நிச்சயம் குறிப்பிட வேண்டிய அழகான வர்ணனை. இவ்வாறு எத்தனையோ சிறப்புகள்.

                                                                                                                  - சுஜாதா 08 - 12- 2002

புறநானூறு - முக்கிய குறிப்புகள்

  • 400  புறப்பாடல்களைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.
  • இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இதில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. இக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
  • தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த 18 சேர மன்னர்கள், 18 சோழ மன்னர்கள், 15 பாண்டிய மன்னர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், கடையேழு வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், சான்றோர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியனவும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
  • ஔவையார், பாரி மகளிர், வெண்ணீக் குயத்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு உள்ளிட்ட 15 பெண்பாற்புலவர்கள் புறநானூற்றில் பாடியுள்ளனர். ஔவையாரே 33 பாடல்கள் பாடியுள்ளார்.
  • இப்பாடல்கள், வெட்சி, கரந்தை, வங்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப் பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும். (திணை - ஒழுக்கம், நெறி, துறை - திணையின் உட்பிரிவு)
  • இந்நூலில் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.

சில பாடல்கள்

பாடியவர் : ஔவையார்   பாடப்படோண் : அதியமான் 

 திணை : பாடாண்      துறை- வாழ்த்தியல்

பாடல் பின்னணி:  தன்னுடைய நாட்டில் ஒருமுறை அதியமான் உயர்ந்த மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தான்.  அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான்.  தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு அதைக் கொடுத்தான்.  அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது.

"வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!

பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி  
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்  
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே"

பொருள்:  

 வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே!

போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே!

பால் போன்ற பிறை நிலா நெற்றியில் பொலியும் தலையையும், நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ நிலைபெறுவாயாகப் பெருமானே!

பழைய நிலைமையுடைய பெரிய மலையின் பிளவில் உள்ள, ஏறுவதற்கு அரிய உச்சியில் உள்ள, சிறிய இலையையுடைய நெல்லி மரத்தின் இனிய கனியைப் பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதனால் வரும் பயனை அறிந்தும் அதை என்னிடம் கூறாது உனக்குள்ளேயே வைத்து, சாதல் நீங்க எனக்கு அதை அளித்தாயே!

_________________________

பாடியவர் : கபிலர்   பாடப்படோண் : வேள்பாரி, மூவேந்தர் 

 திணை : நொச்சி      துறை- மகண்மறுத்தல்

பாடல் பின்னணி:   

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் பறம்பு மலையைப் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டனர்.   பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் போர் வல்லமையையும், கொடை வண்மையையும் புகழ்ந்து, அவர்களை அறிவுறுத்தும்படியாக இயற்றிய பாடல் இது.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும்  பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும்  உளமே,  
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.

பொருள்: 

 கடந்து சென்று அழிக்கும் படையோடு நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை வெல்வதற்கு இயலாது.  முந்நூறு ஊர்களைக் கொண்டது இந்தக் குளிர்ந்த, நல்ல பறம்பு நாடு.  முந்நூறு ஊர்களையும் பரிசில் வேண்டி வந்தவர்கள் பெற்றுக் கொண்டு விட்டனர்.  இங்கே நானும் பாரியும் உள்ளோம்.  நீங்கள் பாடியபடி பாரியிடம் சென்றால், பறம்பு மலையும் உங்களுக்கு உண்டு.

புறநானூறு - பதிவிறக்க இணைப்புகள்

புறநானூறு - உ.வெ. சாமிநாதைய்யர்  (Download)

புறநானூறு - புலியூர்க் கேசிகன்  (Download)

புறநானூறு - செய்யுளும் செய்திகளும்  (Download)

புறநானூற்று கதைகள்  (Download)






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...