முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்?


இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய
முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும் 
சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர்.
அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன.

எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள் சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில்
முக்கியமானவை இவை. எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வந்துவிடும். அதனால் இது மாதிரி புத்தகங்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன்
  
பிறகு சுஜாதா அபிமானி ஆன பின் பிடிக்காமலே போனது. அப்போதுதான் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகங்களும் பிரபலம். இருந்தாலும் என்னை அவ்வளவு கவரவில்லை. அந்த வயதில், எல்லாப் புத்தகங்களுமே அறிவுப் பெட்டகங்கள் என்றுதான் எண்ணினேன். பிறகுதான், இடதுசாரி புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகஙகள், அரசியல் புத்தகங்கள்,வரலாற்று புத்தகஙகள் எல்லாவற்றிலும் உண்மையும் உண்டு. பொய்களும் உண்டு (எழுதுபவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ) என்று உணர்ந்தேன். ஆனாலும் அவற்றின் நுணுக்கமான அரசியல், கருத்து திணிப்புகள், விற்பனை தந்திரங்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் தெரிந்து கொண்டேன். 
தன்னம்பிக்கை புத்தகங்களின் பலமே வார்த்தை ஜாலங்களும், அந்த நேரத்தில் அவை கொடுக்கும் கவர்ச்சிகரமான போதைதான். புத்தகம் கொஞ்சம் பிரபலமானால் போதும். மார்கெட்டிங் உத்திகள் ஆரம்பமாகி விடும். அதற்காக அவற்றில் கருத்துகளே இல்லை என்று கூறவில்லை.

எந்த ஒரு புத்தக வாசிப்பிலும் 3 நற்பயன்கள் உண்டு. சிந்தனை தூண்டல், வார்த்தைப் பிரயோகங்கள் கற்றல் (Vocabulary), ஏதாவது ஒரு கருத்தை கற்றல். எனவே எந்தப் புத்தகமானாலும் வாசிப்பதில் தவறில்லை.

பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்வதுதான் முக்கிய தேவை. இந்தியாவில் இந்த
சுயமுன்னேற்ற இலக்கியமே இல்லையா? நிறைய இருக்கிறது. நமது நூல்கள் வெறும் செல்வம் சேர்க்கும் வழிகள், தலைவனாக்கும் வழிகள் என்று பொருள் சார்ந்த வாழ்வை (Materialistic Life) ஆதரிப்பதில்லை. மனிதனை நல்வழிப்படுத்துதல், அதன்மூலம் அவனுக்கு மன அமைதியை உருவாக்குதல், அதனால் அவன் வாழ்வில் முன்னேற வழி செய்தல் என்கிற ரீதியில்தான் இருக்கும். சங்க நூல்கள், திருக்குறளிலிருந்து, ஆத்திசூடி, நாலடியார், மூதுரை போன்று ஆயிரக்கணக்கில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு அவற்றை கொண்டு சேர்க்கும் கடமையும் நமக்கு உண்டு.

மேலைநாடுகள் முழுக்க இந்த பொருள் சார்ந்த வாழ்வையே நம்மிடம் திணிக்கின்றன. உடனடி செல்வந்தராவதற்கு வழி, இலட்சியங்களைக் கனவைத்
துரத்துவதுபோல் துரத்துவது என்பன எல்லாம் கவர்ச்சிகரமான எண்ணங்கள்தானே! நேர்மறை எண்ணங்களை (Positive Thinking) வளர்ப்பதற்கு எத்தனை புத்தகங்கள்? ஆனால் 
நமது வள்ளுவர்' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று எளிமையாகச் சொல்கிறாரே! 'ஊக்கமுடைமை' அதிகாரம் முழுக்கவே தன்னம்பிக்கை ஊட்டுபவைதானே! விவேகானந்தரையும் படியுங்கள். மனம் எழுச்சி கொள்ளும்.

நான் படித்து உணர்ந்து கொண்டது எல்லாம் இதுதான் : வாழ்க்கை - உடல் ஆரோக்கியம், செல்வம், உறவுகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகிய நான்கு தூண்களால் ஆனது. இவை நான்கும் சமமாக உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அப்படி அமைத்துக் கொள்ள வேண்டும். சுயநலம், எதிர்மறை சிந்தனைகள், பயம் ஆகிய மூன்றும் கரையான்போல மகிழ்ச்சியை அரிக்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருங்கள். Simple!

நிறைவு செய்யும் முன் உங்களுக்காக, தற்போது பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்கள்- 
நிறைய வாசியுங்கள். பணக்காரராவதற்கு அல்ல, அறிவை வளர்ப்பதற்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...