முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற - கைஜென் (KAIZEN)

 ஆயிரம் மைல் பயணமும் சிறிய அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது!


A Journey of Thousand miles must begin with the first step - LaoTsu

இன்ஜினியரிங் துறையில், அதுவும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய வார்த்தை கைஜென். ஜப்பானிய மொழியில் கைஜென் என்றால் ' நல்ல மாற்றம்' அல்லது 'தொடர் முன்னேற்றம்' என்று பொருள். தரமான பொருட்கள் என்றாலே ஜப்பானிய உற்பத்தியாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்றைக்கு அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படும் தர நிர்வாக நடவடிக்கைகளுக்கு (Total Quality Management)  மூலம் ஜப்பானியர்கள்தான். அதற்கு காரணம் கைஜென் என்ற கோட்பாடு.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், நலிவுற்ற தொழிற்சாலைகளை (முக்கியமாக ஆயுத உற்பத்தி) சீரமைக்க அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்தது ஜப்பான். அவர்களில் முக்கியமானவர் எட்வர்ட் டெமிங் (Edward Deming) . (டெமிங்கின் PDCA Cycle விதி பிரபலம்) . அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி, ஜப்பானிய தொழிற்சாலைகள், கைஜென் என்று செயல்படுத்துகின்றனர். டொயொட்டா (Toyoto),
இதை தொழிற்சாலைக்குள்ளான பயிற்சி ( Training Within Industry -TWI) என்று திறம்பட நடத்தி வெற்றி பெற்றது. அது அமெரிக்காவின் கார் கம்பெனிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறியது.

கைஜென் நடைமுறையின் 5 முக்கிய கூறுகள் (5 Elements of Kaizen Approach)

1. குழுவாக செயல்படு 2.சுய ஒழுக்கம் 3. மன உறுதியை அதிகரித்தல் 4.தர குழுக்கள் 5. முன்னேற ஆலோசனைகள் (Team work, Personal Discipline), Improved Morale, Quality Circles, Suggestions for Improvement)

பின்னர் கைஜென் வங்கிகள், அரசு நிர்வாகம், உடல் ஆரோக்யம், மனநல சிகிச்சை, வாழ்க்கை பயிற்சி ( Life Coaching) போன்ற பல துறைகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு கைஜென் இன்ஸ்ட்டியூட் உலகெங்கும் பயிற்சிகள் வழங்குகின்றன. (visit:  kaizen.com)

அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த  மனநல மருத்துவரான ராபர்ட் மௌரர்' கைஜென்னை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார்.

ஒரு சிறிய அடி உங்கள் வாழ்க்கையை மாற்றும் - கைஜென் வழி - ராபர்ட் மௌரர் ( A Small step can change your Life - Kaizen way by Robert Maurer)


எந்த ஒரு செயலானாலும், புதிய முயற்சியானாலும் சிறிய சிறிய அடிகளாகத்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறது கைஜென். அது புதிய பழக்கங்களை ஆரம்பிக்க, தேவையில்லாத பழக்கங்களை கைவிட, புதிய திறனை வளர்த்துக் கொள்ள, பெரிய பிரச்னைகளை எதிர் கொள்ள, உறவு முறைகளை மேம்படுத்த போன்ற எதுவானாலும்.

கைஜென் எப்படி வேலை செய்கிறது?
நமது நடுமூளையில் அமிக்டாலா (Amygdala) என்ற பகுதி உள்ளது. இதுதான் நமது உடலில் அச்சம், பதட்டம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளை நிர்வகிக்கிறது. மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், இந்த அமிக்டாலாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்கும்? ஒரு சிங்கம் எதிர்பட்டால்,
சண்டையிட்டு வெல்ல முடியாது, ஓடி விடு என்று சொல்லும். அதுவே ஒரு குரங்கு மேலே தாவினால், ' அதை அடித்து துரத்து' என்று ஆணையிடும். இந்த "சண்டையிடு அல்லது ஓடிவிடு" (Fight or Flight Response) எதிர்வினையைை அமிக்டாலா, இப்போதும் அதேபோல்தான் தூண்டிக் கொண்டிருக்கிறது.

ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், மூளை, வேண்டாம் என்று ந்ம்மை பாதுகாக்கும் மனப்பான்மையிலேயே செயல்படும். எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளவிடாது. 
 ஒரு சிறிய உதாரணம் - வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அமிக்டாலா அதற்கு பல நேரம் ஆகலாம். உடல் அசுத்தமாகும். சாப்பிட வேண்டும். இப்போது இந்த எளிதான செயலை செய்யலாம் என்று திசை திருப்பும். நாம் ஒரு 5 நிமிடம் இந்த மேஜையை சுத்தம் செய்யலாம் என்று நினைத்தால் அது தடை போடாது. 5 நிமிடம்தானே, மேஜை மட்டும்தானே என்று விட்டுவிடும். பிறகு இன்னும் ஒரு 5 நிமிடம் இந்த அறையையே முடித்துவிடலாமே என்று தோன்றும். இப்படி சிறிய சிறிய செயலாகச் செய்து முழு வீட்டையும் சுத்தம் செய்துவிடலாம். இதை ஆங்கிலத்தில், "முழு திமிங்கலத்தை எப்படி சாப்பிடுவது? கொஞ்சம் கொஞ்சமாக கடித்துதான்" என்பார்கள். அது போலத்தான்.

எனவே நாம் சிறிய செயல்களாக ஆரம்பித்தால், அமிக்டாலா உறக்கத்திலேயே இருக்கும். ஒரு சிறிய மாற்றத்தை ஆரம்பித்தாலே, நமது மூளையில் நியூரான்களிடையே புதிய இணைப்புகள் உருவாகின்றன. மூளை மாற்றத்திற்கு தயாராகி விடுகிறது. மூளை நம்மை மேலும் உற்சாகமாக செயல்பட வைக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், சிறிய அடியை எடுத்து வைப்பதுதான்.

ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமா? சிறிய கேள்விகளாக உங்களையே கேட்கத் துவங்குங்கள், என்கிறது கைஜென். நமது மூளைக்கு சிறிய எளிதான கேள்விகள் ரொம்பப் பிடிக்கும். பிரச்னை பெரியது சிக்கலானது என்றால் சிந்திக்க விடாது. இதை 'மூளையை செதுக்குதல் (அ) வடிவமைத்தல் (Mind Sculpture) என்கிறார்கள். பெரிய நிறுவனங்களோ, சாதனைகளோ, சிறிய யுக்தியில் தொடங்கப்பட்டவையே. 

சிறிய செயல்களால் முழு பலன் அடைய கால தாமதமாகுமே? இல்லவே இல்லை. சிறிய செயல்கள்தான் உங்களிடம் வேகமான மாற்றத்தைக் கொண்டு வந்து, உங்களை வேகப்படுத்தும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்ய நினைக்கிறீர்கள். காலையில் எழுந்து , வேர்க்க விறுவிறுக்க 2 மணி நேரம் எல்லா பயிற்சியும் செய்கிறீர்கள். அடுத்த நாள் கண்டிப்பாக எழுந்திருக்கவே அமிக்டாலா விடாது. அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? உடல் வலிக்கும் என்று சொல்லி தூக்கத்தைத் தூண்டிவிடும். மறுபடி உங்களுக்கு உடற்பயிற்சி எண்ணமே வராது. இப்போது ஒரு 10 நாளைக்கு 5 நிமிடம் மட்டும் உடற்பயிற்சி செய்வது என்று ஆரம்பியுங்கள். தன்னிச்சையாக 5 வது நாளில் 15 நிமிடம், 10 வது நாளில் 30 நிமிடம் என்று செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

புதிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமா? தினமும் ஒரு வார்த்தை கற்றுக் கொள்வது என்று ஆரம்பியுங்கள். மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்.
பணம் சேமிக்க வேண்டுமா? 'சிறுதுளி பெருவெள்ளம்' உங்களுக்கே தெரியும். அமல்படுத்துங்கள்.
செலவைக் குறைக்க வேண்டுமா? டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு செல்கிறீர்கள். தேவையான பொருட்களை எடுங்கள். பில் போடும் முன், நீங்கள் எடுத்ததில் ஒன்றை திரும்பக் கொண்டு வையுங்கள். அது போல் 2,3 முறை நடந்தாலே, தன்னிச்சையாக குறைவான பொருட்களை எடுக்க ஆரம்பிப்பீர்கள்!

மன அழுத்தமாக உணர்கிறீர்களா? ஒரு முறை பலமாக மூச்சை இழுத்துவிடுங்கள். 
உங்களுக்கு நிறைய பிரச்னைகளா? (யாருக்குத்தான் இல்லை?) முதலில் சிறு சிறு பிரச்னைகளைப் பட்டியலிட்டு தீர்வு காணுங்கள். பெரிய பிரச்னைகளைத் தள்ளி போடுங்கள்.
மற்றவருடன் உறவுகளை மேம்படுத்த, சிறு சிறு உரையாடல்கள், சிறு சிறு கேள்விகள் கேட்பது மட்டும் செய்யுங்கள். பெரிய விவாதங்கள்செய்யவோ, சண்டையிட்டு பெரிய தீர்மானங்கள் எடுப்பதையோ செய்யாதீர்கள்.

கைஜென் மற்றும் புதுமைகளை முயற்சிப்பதுதான் வாழ்க்கையின் மாற்றத்திற்கான இரண்டு வழிகள்!

 
Kaizen in Industries

(Images from Google)



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4 எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம். இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho) இந்தப் புத்தகம்   1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால் போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு, 8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள்  நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா? ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும் இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும்...

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...