முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேரர்கள் புகழ்பாடும் பதிற்றுப்பத்து (பதிவிறக்க உரையுடன்)

சங்க நூல்கள் அறிமுகம் - 8

பதிற்றுப்பத்து

கடைச் சங்க காலத்தில் சேர நாடு பரந்து விரிந்து, வளத்தாலும்  சிறந்து விளங்கியது. அப்படி சிறந்து விளங்கிய 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் தலா பத்து பாடல்களாக 100 பாடல்களைப் பாடியதே பதிற்றுப் பத்து. அவர்களது ஆட்சி முறை,

கொடை, வீரம், வெற்றி, புகழ், அறிவு, பண்பாடு ஆகிய புறப் பொருட்களைப் பாடும் புறப்பாடல்கள். இதில் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை.

பாடல்கள் 5 முதல் 57 அடி வரையுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய குறிப்பு இல்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்  துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பத்தி இறுதியிலும் அதனைப் பாடிய புலவர், பாட்டுடைத் தலைவன், அவன் வழங்கிய கொடை, பத்துப் பாடல்களின் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்ற பதிகம் இடம் பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்த ஒருவரால் இப்பதிகம் பாடப்பட்டிருக்கலாம்.

இந்நூலை முதலில் பதிப்பித்தவர் உ,வே, சாமிநாதைய்யர். உரை இயற்றியவர் சு.துரைசாமிப் பிள்ளை. பரிபாடலைப் போலவே பதிற்றுப் பத்தும் இசையோடு பாடுதற்குரியது.

சில பாடல்கள்

பாடல் - 11, *புண்ணுமிழ் குருதி*,

 பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
 பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
 துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு: செந்தூக்கு,   வண்ணம்: ஒழுகு வண்ணம்

விளக்கம்: போரிடையே பகைவரது மார்புகளைப் பிளந்தான். பிளக்கப்பட்ட அம்மார்புப் புண்களினின்றும் செங்குருதி வெள்ளமாக வழிந்து பெருகி ஓடலாயிற்று. அதனால் கழியின் கருமையான நீரும்  தன் நிறத்தில் மாறுபட்டதாய் ஆயிற்று. இவ்வாறு போர்க்களத்தை வியந்து கூறிய உவமைநயத்தால் இப்பாட்டிற்குப் ' புண்ணுமிழ் குருதி' எனப் பெயராயிற்று.

உலகினுள்ளே இயற்கை வகையாலே இயன்ற மக்களைப் பாடுதலால், இதனைச் 'செந்துறைப் பாடாண் பாட்டு' என்கின்றனர். ஒழுகிய ஓசையாய்ச் செல்வதனால் 'ஒழுகுவண்ணம்' என்றனர். ஆசிரியப்பா ஆனதால் 'செந்தூக்கு' என்றனர்.


பாடல்
"வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ்சூல்
நளி இரும் பரப்பின் மாக்கடல் முன்னி,
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்குஞ்

சூருடை முழு முதல் தடிந்த பேரிசைக்,  5
கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த *புண் உமிழ் குருதி*யின்,
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து,

மனாலக் கலவை போல அரண் கொன்று,  10
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடி உடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,

நார் அரி நறவின், ஆர மார்பின்,  15
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின், பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்த மேல்கொண்டு பொலிந்த நின்

பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே,  20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

பொருள்
(1-6)
மலை போல் எழும் அலைகள் வெள்ளிய சிறு துளிகளாக உடையுமாறு காற்றுப் பாய்ந்து அலைக்கப்பட்டு ஒலியெழுப்பும் நிறைந்த நீருடைய பெரிய இடப்பரப்பைக் கொண்ட கடலுக்குள் சென்று, பிறருக்குத் துன்பத்தைத் தரும் இயல்புடைய அவுணர்கள் அரணாக நின்று பாதுகாத்தப் போதிலும், சூரவன்மாவினுடைய மாமரத்தை வேருடன் வெட்டிய, மிகுந்த் புகழும் கடுஞ்சினமும் உடைய செவ்வேள், பிணிமுகம் என்னும் பெயருடைய யானையின் மேலிருந்து ஊர்ந்து பொலிவு பெற்றார். அது போல..
(7-16)
கூர்மையான நுனியுடைய வாள்படையை எதிர்த்து நிற்கும் பகைவர்களை வெட்டி வீழ்த்தும்போது அவர்களுடைய மார்பு பிளத்தலால் உண்டாகிய புண்ணிலிருந்து உதிரம் ஒழுகி, நீலமணி போன்ற நீரும் நிறம் மாறி, குங்குமக் குழம்பினைப் போலக் காட்சியளித்தது. உயர்ந்த மன எழுச்சியுடன் வலிமையோடு பகைவர்களின் அரண்களை அழித்து, பகைவர்களால் காக்கப்பட்ட, பூக்கள் நிரம்பிய கடம்ப மரத்தினை அடியோடு அழித்தனர். அம்மரத்தினால் போரின் வெற்றியை ஒலிக்கும் முரசினைச் செய்தனர். பொரில் வெற்றியையும், வடிக்கப்பட்ட கள்ளினையும் மாலையணிந்த மார்பினையும் அஞ்சாது நின்று அறப்போர் செய்யும் தானையையும் உடைய சேரலாதனே!
(17-25)
முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள், பகலில் மேய்ந்த நரந்தம் புற்களையும், அருவிகளையும் கனவில் கண்டு மகிழும். இதனால் சேரலாதன் ஆட்சியில் விலங்குகள் கூட நிம்மதியாக உறங்குகின்றன. வடக்கே பெரிய புகழையுடைய இமயம், தெற்கே உள்ள குமரி, இவற்றுக்கு இடைப்பட்ட நாடுகளில் சேரலாதன் புகழ் பரவிக் கிடக்கின்றன. செருக்குற்று விளங்கும் பகை மன்னர்களின் வலைமை கெடும்படியாகப் போரில் வென்று, மார்பில் வெற்றிமாலை அணிந்தவன். வெற்றியால் உயர்ந்த தந்தத்தையுடைய குற்றமில்லாத யானையின்  மாலையணிந்த பிடரியின் மேலேறிப் பொலிவு செய்பவனே! நின்னுடைய புகழ், செல்வச் சிறப்பினை யாம் இனிது காண்கிறோம். நீ வாழ்வாயாக!

பாடல் - 42 *தசும்பு துளங்கு இருக்கை*

பாடியவர்: பரணர், 
பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், 
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, 
தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

விளக்கம்
வெற்றிவிழாவின் மகிழ்வினைச் செங்குட்டுவனும் அவன் மறவருமாகக் கொண்டாடுகின்றனர். அது காலைக் கள்ளின் வெறியாலே அவர்கள் கூத்தாட, அவர் கைகளில் இருந்த குடங்களிலுள்ள கள்ளும் கூத்தாடிற்று. அத்தகைய இருக்கை என்ற நயத்தால் இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.

பாடல்

"இரும் பனம் புடையல் ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு ஆழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது  5

தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ!
மைந்து உடை நல் அமர்க் கடந்து வலம் தரீஇ,
இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டிச்  10

சாந்து புறத்து எறித்த *தசும்பு துளங்கு இருக்கைத்*
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து,
கோடியர் பெரும் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்  15

மன்பதை மருள அரசுபடக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய,  20

மா இரும் தெள் கடல் மலி திரைப் பெளவத்து,
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண் பல வரூஉம் புணரியின் பலவே."

பொருள்

கரிய பனந்தோட்டாலாகிய மாலையையும், பொன்னாற் செய்த வீரக் கழலையும், மீனைப்பிடிக்கின்ற சூழ்ச்சியோடு சிறற் பறவையானது குளிர்ந்த களத்து நீருட் பாய்ந்து மேலெழுந்த காலத்துத் தோன்றும் அதன் அலகைப் போல வெள்ளூசியானது மூழ்கி மூழ்கி எழுந்து செயற்படுதலாலே தைக்கப் பெற்ற நெடிய தழும்பு பரந்த போர்ப்புண்ணின் வடுவானது பொருந்திய மார்பினையும்;         அம்புகளாற் புண்பட்ட உடம்பினையும் உடையவர்களாகப் போர் மேற்கொண்டு, வந்தோரல்லாத பிறருடன் தும்பை சூடிப் பொருதலை மேற்கொள்ளாது, போர் குறித்தாருடனேயே போர் செய்த மாட்சியும் உடையவராகிய, அத்தகையவரான மறக்குடிச் சிறந்தோர்க்குத் தலைவனே! நல்ல நெற்றியுடையாளான வேண்மாளின் கணவனே! தலைமை சான்ற யானைகளையும் எதிர்நின்று அளிக்கும் பேராற்றல் மிக்க குட்டுவனே!

பகைவருடன் செய்த ந ல்ல போரிலே, அப்பகைவரை எதிர்நின்று பொருது வெற்றி கொண்டு, நின்வீரர்களுக்கு வெற்றிப் புகழ் தந்தனை! இஞ்சியும் பூவும் விரவிய பசிய தாரினைப் பூட்டி, சந்தனப் புறத்தே பூசப் பெற்ற கட்குடம் அசையும் இடத்திலிள்ள, இனிய சேறாக விளைந்து முதிர்ந்த, நீல மணியின் நிறத்தைக் கொண்ட கள்ளினைத் தனக்காக மட்டுமே பேணிவைத்துக் கொள்ளாது, அதனைப் பிறர்க்கும் கொடுத்தலாலே, அவர் எல்லோரும் வளவிய களிப்புச் சுரந்து நிறைபவராயினர். கூத்தரது பெரிய சுற்ரமானது வாழ்வினைப் பெறும் படியாக, அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் செருக்குடைய குதிரைகளை நீ வழங்கினாய். அந்த நின் கொடைச் செயலை நினைத்தால் கண்டும் கேட்டும் அறிந்த மக்கள் வியப்படையும் படியாகப் பகைவனைப் போரில் வென்றாய்.

முற்பட்ட பொற்வினையானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டாக, நின் தேர்மறவரோடு கூடிய ஏனை மறவர் சுற்றமெல்லாம் உலகமெங்கணும் மொய்த்தபடி நிற்பாராயினர். ஒளிருகின்ற உயர்ந்த மருப்புகளை ஏந்திய களிற்று யானைகளின் மேலாக ஊர்ந்தபடி செல்லும், நின் வெற்றியைப் போற்றிப் பாராட்டினர். கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில், நுரையாகிய வெள்ளிய தலையினை உடைய நிறமுள்ள பிசிர்களாகச் சென்று கரைக்கண் மோதி உடையும்படியாகத், தண்ணிய பலவாக வரும் அலைகளைக் காட்டிலும் நீ அன்று வளங்கிய குதிரைகள் பலவாகும், பெருமானே!


பதிவிறக்க:

பதிற்றுப் பத்து  (Download)

பதிற்றுப் பத்து- புலியூர்க் கேசிகன்  (Download)








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...